ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதில் ஊழல் நடைப்பெற்றுள்ளது என குற்றம் சாட்டியும் இதற்குக் காரணமான மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் முகுல் வாஷ்னிக், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் இளங்கோவன், மகளிர் அணி ஜான்சிராணி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் திரளாக கலந்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பேசினார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், "சுவிஸ் வங்கியிலிருந்து பணத்தை கொண்டு வருவேன் என கூறி இந்திய மக்களின் சுறுக்கு பையில் இருந்ததை வங்கிக்கு வர வைத்தார். மோசடி செய்து தப்பியோடிய விஜய் மல்லையா,நீரவ் மோடியை இந்தியாவிற்கு கொண்டு வர முடியவில்லை.
தமிழ்நாட்டில் மிக மோசமான ஊழல் ஆட்சி நடக்கிறது. மத்தியில் காவி ஆட்சியும் மாநிலத்தில் ஆவி ஆட்சியும் நடக்கிறது .ஆவியிடம் எப்படி பேசுவது என தெரிந்தால் நான் ஜெயலலிதாவிடம் பேச வேண்டும் அவரிடம் பல விஷயங்கள் பேச வேண்டும். புழல் சிறையில் செய்யப்பட்டுள்ள வசதி நாளை சிறைக்குள் செல்லவிருப்பவர்களுக்காக செய்யப்படுகிறது’’ என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசுகையில், 2014-ம் ஆண்டு ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இந்தப் போர் விமானம் ஒன்றுக்கு தலா 526 கோடி என மொத்தம் 126 ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு வந்த பி.ஜே.பி அரசு ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு தலா 1,060 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் 41,000 கோடி ஊழல் செய்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. இந்த ஊழல் மத்திய அரசை வீட்டுக்கு அனுப்பும். வேண்டும். பாசிச ஆட்சி என்று சொன்னால்.. சிறை என்றால்... நான் தனியாக இல்ல எல்லோரும் சேர்ந்து சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம். இந்த மத்திய அரசை விரட்ட வேண்டும்’’ என்றார்.