ஆதரவற்ற குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தந்த, வணக்கத்துக்குரிய ஒரு ஆட்சியர்!

Friday 28, September 2018, 15:49:03

மனுநீதிநாள் முகாமில் தன்னிடம் தரப்பட்ட ஒரு மனுவினைக் கருணையோடும் பரிசீலித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எடுத்த நடவடிக்கை ஆதரவற்ற ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே மீட்டுத் தந்துள்ளது. ஆட்சியரின் மனித நேயமிக்க இந்த நடவடிக்கை பொதுமக்களால் பாராட்டப்படுகிறது.

தாய் தந்தையரை இழந்து தம்பி தங்கைகளை காப்பாற்ற வாழ்வாதரம் இன்றி தவிப்பதாக மனுநீதிநாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் 19 வயதான ஆனந்தி என்ற இளம்பெண் கண்ணீருடன் முறையிட்டார். அந்தப் பெண் கூறியவற்றின் உண்மை நிலையை விசாரித்துத் தெரிந்து கொண்ட ஆட்சியர் ஆனந்திக்கு கருணையின் அடிப்படையில் கனிகிலுப்பை அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியினை வழங்கி உத்தரவிட்டார்.

அதற்கான பணி நியமன ஆணையை ஆனந்தியின் வீட்டிற்கு நேரடியாக சென்று அளித்த ஆட்சியர், ஆனந்திக்கு புதிய மிதிவண்டி மற்றும் பழங்கள் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்களோடு அமர்ந்து உணவுண்டார்.  தற்போது ஆனந்தி குடும்பத்தினர் வசித்து வரும் வீடு மிகவும் பழுதடைந்து உள்ளதால், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஆணையும் வழங்க, வீட்டின் கட்டுமானப் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தெரிவித்த தகவல்கள் கல்மனதினையும் கரையச் செய்துவிடும் தன்மை வாய்ந்தவை. “திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 13.08.2018 தேதி அன்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்திற்காக அலுவலகத்தில் நுழையும் போது செல்வி. வெ.ஆனந்தி கண்ணீர் நிறைந்த கண்களுடன் வராண்டாவில் என்னைச் சந்திக்க காத்து கொண்டிருந்தார்.

அவரை அருகில் அழைத்த நான், எதற்காக இங்கு வந்தாய்? என கேட்ட போது, தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுவது உங்கள் கையில் தான் இருக்கிறது. இல்லையெனில், நாங்கள் அனைவரும் இறப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியதை கேட்டவுடன் அவரிடம் உனது குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கிறேன் என ஆறுதல் தெரிவித்து எனது அறைக்கு அழைத்து சென்று அமர வைத்து உன் குறையை சொல் என்று கேட்ட பிறகு இந்த 19 வயது பெண்ணின் நிலையை கேட்பதற்கு கூட வலிமையான இதயம் வேண்டும் என்பதை பின்னர் உணர்ந்தேன்.

எனக்கு தாய், தந்தை இருந்தார்கள், தற்போது இருவரும் உயிருடன் இல்லை. எனது உடன்பிறந்த இளைய சகோதரி மற்றும் இளைய சகோதரர், வயதான பாட்டி மட்டும் உடன் இருக்கிறார்கள். என்னுடைய தாய் கனிகிலுப்பை அரசு ஆரம்பப் பள்ளி சத்துணவு மையத்தில் சத்துணவு உதவியாளராகப் பணியாற்றி வந்தார். எனது தந்தை உடல்நிலை மிகவும் சரியில்லாததால் அவரால் வேலைக்கு செல்ல இயலாத நிலையில், எனது தாயின் வருமானத்தில் மட்டுமே எனது குடும்பம் நடந்து வந்தது.

இந் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் +2 படிக்கும் போது எனது அம்மா திடீரென இறந்து விட்டார். எனது அம்மா பணியில் இருக்கும் போது இறந்ததால் கிடைக்கப் பெற்ற இறப்புகால பணப்பயன் தொகையினை உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த எனது தந்தையின் மருத்துவ செலவிற்காக பயன்படுத்தி அவரைக் காப்பாற்றி வந்தோம். அதன் பிறகு நான், எனது வயதான பாட்டியுடன் விவசாய கூலி வேலைக்கு சென்று உடல்நிலை சரியில்லாத தந்தை, தங்கை மற்றும் தம்பி ஆகியோரை காபாற்றி வந்தேன்.

ஓராண்டுக்கு முன் 2017-ல் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த எனது தந்தையும் இறந்து விட்டார். தற்போது எனது பாட்டியும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் நான் மட்டுமே விவசாய கூலி வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு எனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன்; என்னாலும் இப்படிப்பட்ட கடுமையான உடலுழைப்பு வேலைகளை செய்ய முடியவில்லை எனத் தெரிவித்தார்.

எனது அம்மா பணியில் இருக்கும் போது இறந்ததால் கருணை அடிப்படையில் பணி அளிக்கக் கோரி மனு அளித்தும், 21 வயதினை நிறைவு செய்த பின்னர்தான் வேலைக்குத் தகுதி எனத் தெரிவித்து வேலையும் கொடுக்கவில்லை. எனக்கு 21 வயதாக இன்னும் 2 ஆண்டுகள் உள்ளதால், வேலை கிடைக்கும்வரை 2 ஆண்டுகளும் தொடர்ந்து இந்த வறுமை நிலைக்கு தள்ளப்பட்டால், நாங்கள் உயிருடன் வாழ்வதற்கு வழியில்லை.

நான் கூலி வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கே பத்தாத நிலையில், நானும், எனது தங்கையும் +2 படித்தாலும் கல்லூரியில் சென்று படிக்க இயலவில்லை. எனது தம்பி மட்டும் அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்ற விவரங்களை தெரிவித்தார்.

இந்த பெண் தனது சூழ்நிலையினை விளக்கியவுடன் கனத்த இதயத்துடன் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து விவரம் கேட்ட போது, இவருக்கு உடனடியாக கருணை அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டுமென்றால், அதற்கு அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்தார்கள்.  இந்தப் பெண்னிற்கு உடனடியாக வேலை கிடைக்காமல் இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் வேலை கிடைக்கும்போது அந்த குடும்பமே இல்லாமல் போகும் துயர நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து, அரசுச் செயலருடன் தொடர்பு கொண்டு இந்த சூழ்நிலையினை விளக்கி இதனை மிகவும் சிறப்பினமாகக் கருதி அவரின் கல்வித் தகுதி அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்ய அனுமதி அளிக்குமாறு கோரியதுடன் அதற்காக முன்மொழிவினையும் அனுப்பி வைக்கப்பட்டது.

அன்றே அப் பெண்னிற்கு இரண்டு மாதம் வரை குடும்ப செலவிற்காக தேவைப்படும் தொகையும் கொடுத்து, அரசு வேலை கிடைக்கும் வரை கூலி வேலைக்குச் செல்ல வேண்டாம் இத் தொகையினை கொண்டு எவரையும் எதிர்பார்க்காமல் குடும்பத்தினை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி, நல்ல எதிர் காலம் உனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையினை தெரிவித்து அனுப்பி வைத்தேன். இந் நிலையில், உடல்நிலை நலிவுற்றிருந்த அவரது பாட்டியும் 24.08.2018 அன்று இறந்து  விட்டார்.

இதன் பிறகு, பெற்றோரோ அல்லது பெரியவர்களோ யாரும் இல்லாத இந்த சூழ்நிலையில் வெ.ஆனந்தி என்பவரை மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தினரையும் வறுமை நிலையிலிருந்து முற்றிலுமாக மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவரது தங்கை வெ.அமுதா என்பவரை நேரில் வரவைத்து உனக்கு நிரந்தரமான வாழ்க்கை வேண்டுமென்றால் கல்லூரிக் கல்வியினை கட்டாயம் தொடர வேண்டும் என அறிவுறுத்தி, ஒரு தனியார் கல்லூரியில் 3 ஆண்டுகளுக்கும் எந்தவித கட்டணமும் இல்லாமல் B.Sc., Bio - Chemistry படிப்பில் சேர்த்து தற்போது படித்து வருகிறார்.
மேலும், கல்லூரி கல்வியினை பயில வேண்டும் என்ற கனவு முடிந்து விட்டதாக கருதிய வெ.ஆனந்திக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தொலை தூரக் கல்வியில் 3 ஆண்டு செலுத்த வேண்டிய கட்டணத் தொகை அளிக்கப்பட்டு பி.ஏ. தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்பு சேர்த்து தற்போது படித்து வருகிறார்.

26.09.2018 அன்று இவர் பொருட்டுச் சிறப்பினமாகப் பெறப்பட்ட அரசாணை அடிப்படையில் இவரைக் கருணை அடிப்படையில் சமையல் உதவியாளர் பணியில் அமர்த்துவதற்குப் பதிலாக, கல்வித் தகுதியின் அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் ஆக ஆரணி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கனிகிலுப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணி நியமன ஆணை அளிக்கப்பட்டு 26ந் தேதி  முதல் பணியில் சேர்ந்தார். இனி, அவர்கள் யாரையும் நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை. மாதம் ரூபாய் 9 ஆயிரம் சம்பளம் பெற்று பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும், வீட்டில் குடும்பத் தலைவராகவும் இருந்து ஆனந்தி பொறுப்பாற்றுவார்" இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

ஆதரவற்ற பெண் ஆனந்தியின் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்து விட்டார் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி? என்று நாம் விசாரித்தபோது பதிலாகக் கிடைத்த தகவல்கள் நம்மை நெகிழ வைத்து விட்டன. ஆதரவற்ற ஒரு ஏழைக் குடும்பத்துக்கு    ஒரு ஆட்சியராக என்ன என்ன செய்ய இயலுமோ அனைத்தையும் சமூக அக்கறையுடன் முன்னெடுத்துச் செய்த ஆட்சியர் கந்தசாமி உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியவர்.

ஆனந்திக்குப் பணி நியமன ஆணையினை ஆட்சியர் வழங்கிய நிகழ்வின்போது, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி, தாசில்தார் கிருஷ்ணசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.திலகவதி, எம்.பாண்டியன், வருவாய் ஆய்வாளர்கள் தேவி, தட்சிணாமுர்த்தி, ஊராட்சி செயலாளர் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் இருந்தனர். மாவட்ட ஆட்சியரே இந்த இளம்பெண்ணின் கோரிக்கையை ஏற்று கிராமத்திற்கு வந்து பணி உத்தரவு வழங்கியதை கிராம மக்கள் ஆச்சரியமாக பார்த்து பாராட்டினர்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz