விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய செல்போன், குழந்தைகளின் விளையாட்டுப் பொருளல்ல...

Tuesday 28, August 2018, 16:13:11

பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை:

குழந்தையின் கையில் விளையாட்டு பொருட்களை தான் கொடுப்போம். ஆனால் இப்போது அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் செல்போனில் பொம்மை படங்களையோ, கேம்சுகளையோ போட்டுக் கொடுத்து விடுகிறோம்.  இதனால், குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் என்பது சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. 

குழந்தையை சமாளிக்க பெரும்பாலும் தங்களது ஸ்மார்ட் போனை கையில் கொடுத்து ஒரு வீடியோ அல்லது விளையாட்டுகளை ஆன் செய்து கையில் கொடுத்துவிடுகின்றனர். இதனால் பல மணி நேரங்கள் ஸ்மார்ட் போனுடன் விளையாடும் குழந்தைகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இப்படி ஒரு விளையாட்டுப் பொருளாகத் தரப்படும் செல்போனால் குழந்தையின் அழுகை நின்றாலும் கூட, அதனால் சில பாதிப்புகளும் உண்டாகவே செய்கிறது.

பெரியவர்கள் தான் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் இன்று குழந்தைகளும் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கின்றன. ஒரு வயது குழந்தைக்கு கூட ஸ்மார்ட் போனுக்கு விபரம் தெரியாத நிலையிலேயே அடிமையாக மாறுவது ரொம்பக் கொடுமை. 

குழந்தைகள் தங்கள் கைகளில் போனை வைத்து கொண்டு குனிந்து, தலையை கீழ் நோக்கி வைத்துக்கொண்டு உபயோகப்படுத்துகின்றனர். ஆனால் இது சரியான முறையில்லை என்கின்றனர் மருத்துவர்கள். நீண்ட நேரம் இதே நிலையில் குழந்தைகள் விளையாட்டுகள் அல்லது வீடியோக்களை பார்க்கும் போது அவர்களது கழுத்து பகுதியில் அதிகமான வலி ஏற்படுகிறது.

தொடர்ந்து குனிந்து உட்கார்ந்து போனை பார்த்து கொண்டு இருந்தால் கழுத்து வலி அதிகமாகும். இது சாதாரணமான முதுகு மற்றும் கழுத்து வலியாக மட்டுமே இருந்து விடாது. பின்னாளில் இது ஆபத்தான எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கலாம். இது தோள்பட்டை வலி மற்றும் விரல்களில் வலியை உண்டாக்கும். இதனால் குழந்தைகளின் கையால் எழுதும் திறன் பாதிக்கக்கூடும். தசைப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்.

குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலைப் பயன்படுத்துவதால், மொபைல் கதிரியக்கமானது அவர்களை பாதிக்கிறது. இதனால், அவர்களுக்குப் பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

உங்களது மொபைலை குழந்தைகளிடம் கொடுக்கும் போது அதனை ஏரோபிளைன்மோடில் போட்டு அவர்களிடம் கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு கதிரியக்க பாதிப்பு உண்டாகாமல் தவிர்க்கலாம்.உங்களால் குழந்தைகள் ஸ்மார்ட் போன் உபயோகிப்பதை தடுக்க முடியவில்லை என்றால், குறைவான நேரம் அதனைப் பயன்படுத்தச் சொல்லுங்கள். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இடைவெளி எடுக்க சொல்லுங்கள். வெளியில் சென்று விளையாட சொல்லுங்கள்.வேறு செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்.

குழந்தைகள் அதிகமான ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் முதுகு தண்டு மற்றும் கழுத்து வலி உண்டாகும் என்பதால் அவர்களை நன்றாக ஓய்வெடுக்க சொல்லுங்கள். எந்த வலியாக இருந்தாலும் நன்றாக ஓவ்வெடுப்பது சிறந்த தீர்வாக அமையும். குழந்தைகள் போனை பயன்படுத்தும்போதும் நேராக அமர்ந்து இருக்கிறார்களா,என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலை குனிந்து போனை பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது.

குழந்தைகளின் கல்வி சம்பந்தமான ஏராளமான அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதிக நேரத்தை போனிலேயே செலவழிக்க அனுமதிக்கக்கூடாது. ஆனால் இப்போதெல்லாம் வீட்டுப்பாடத்தினையே மொபைலில் அனுப்பி வேலை வாங்கும் முறையினை பெரும்பாலான பள்ளிகள் கடைப்பிடிக்கின்றன என்பதுதான் வருந்தக்க ஒரு அம்சமாக உள்ளது.

எப்படியாக இருந்தாலும் பெற்றோர்களே.... விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய செல்போன், குழந்தைகளின் விளையாட்டுப் பொருளல்ல. நினைவில் கொள்ளுங்கள்!

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz