ஒசூர் அருகே விஷவாயு தாக்கி இருவர் பலி

Thursday 27, September 2018, 19:05:31

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள சுச்சுக்கானப்பள்ளியில் எச்சைட் பேட்டரி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் மூன்று பிரிவுகளாக 3000 த்திற்க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்

இங்கு கொத்தப்பள்ளியைச் சேர்ந்த மஞ்சுநாத், பாகலூரை சேர்ந்த நாகேஷ் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். நேற்று வேலைக்கு வந்த அவர்கள் இருவருக்கும் அமிலம் கலந்த தண்ணீரைச் சுத்திகரிக்கும் பணி தரப்பட்டது. அவர்களும் அந்த வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்த  நாகேசை விஷவாயு தாக்கியதில் மயங்கினார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மஞ்சுநாத், நாகேசை காப்பாற்ற தொட்டிக்குள் சென்றபோது அவரையும் விஷவாயு தாக்கியது. இதன் காரணமாக இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்தவர்களின் நண்பர்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல்களை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டரி நிறுவனத்தின் அஜாக்ரதையால் இந்தச் சம்பவம் நடந்ததாகவும்,  போதிய பாதிகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றியதே இதற்குக் காரணம் என குற்றம்சாட்டி நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கையாக இருந்தது. 

பின்னர், காவல்துறை அதிகாரிகளின் சமரசத்தினை ஏற்றுக் கொண்டு,  உடல்களைப் பெற்று நல்லடக்கம் செய்தனர்.

© Copyright 2023 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz